Tuesday, October 26, 2010

சுவர்கள்...



சுவர் எழுப்பி சாதி வளர்த்து
மின்சாரத்தைப் பாய்ச்சுகிறாய் நெஞ்சில்
யாகத்தீயாய் வளரும்
உன் அரக்கக்குணம் பிசகாமல் படர்கிறது
செங்கற்களின் இடைவெளிகளிலும்
அதுக்கப்பாலுள்ள மனிதக்கூட்டங்களிலும்...

எழுப்பப்படாத சுவரொன்று
ஊருக்கும் சேரிக்கும் மத்தியில் ஓடுகையில்
வெளிச்சத்தைப் பளிச்சென்று காட்டுகிறாய்
மனிதனின் நாகரிக வளர்ச்சியில்
வளர்ந்துவிட்டது கட்டிடக்கலை அதை
அனாவசியமாய் அசிங்கப்படுத்தும்
உன் நல்லெண்ணத்தை
சுவரோடு கலந்து பொசுக்கிவிடு

Thursday, October 21, 2010

முகவரி தேடி அலைகின்றாய்




நெருக்கமாய் வந்து காதில் கேட்கிறாய்
உன்னால் வெளியேற்றப்படும்
காற்றலைகள் பட்டும்படாததுமாய்
விழுகிறது காதில்..

எந்தவித கூச்சமுமற்று பேசும்
உன் மொழிகள் என்னை
ஒருபோதும் கவர்ந்ததேயில்லை
ஆத்திரத்தை
அள்ளிக்கொட்டுகிறது நெஞ்சில்
உன் முகங்கண்டு மிருகங்கள்
ஞாபகத்திற்கு வருகின்றன.
கொம்புகள் முளைத்திட்ட
உன் தலையில்
வெட்டி எறிய வேண்டியது
கொம்பையா... உன் தலையையா..

நீ தூரத்திலிருந்து கேட்டாலும்
கிட்ட வந்து கிசுகிசுத்தாலும்
உன்னால்
எனக்கு எதுவும் ஆகப்போவதில்லை
நான் பறையன்தான்.